மத்தேயு 24:15 ல் இயேசு கிறிஸ்து தனது மலை பிரசங்கத்தில் - "பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே, அதை வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்" என்று தானியேல் தீர்க்கதரிசியின் வாக்கை உதாரணமாக குறிப்பிடுகிறார். தானியேல் 9:26 ல் மேசியாவாக்கிய ஏசு கிறிஸ்த்துவின் மரணத்தைக் குறித்தும் 9:27 ல் அந்திகிறிஸ்த்துவின் வருகைக்கு முந்தின காலத்தைக் குறித்தும் மிகத்தெளிவாக தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார். தானியேல் புத்தகம் 11 மற்றும் 12ம் அதிகாரங்களில், ஆயிரம் வருட அரசாட்சி குறித்தும் அந்தி கிறிஸ்துவின் வருகைக்கு முந்தின காலத்தைக் குறித்தும் எழுயுள்ளார்.
இவ்வளவு
தீர்க்கமாக மறை பொருட்களை வெளிப்படுத்தும்
அறிவை தேவ ஆவியானவர்
தானியேலுக்குக் கொடுக்க அவர் இளவயதில் தேவனின்பால்
கொண்டிருந்த வைராக்கியம் தான் காரணம் என்பதில்
எந்த சந்தேகமும் இல்லை. தானி 1:1-21 வசனங்களில், ராஜ போஜனத்திற்கு தன்னை
தீட்டுப்படுத்தாமல், மரக்கறி உண்டாலும் தான் மற்றவர்களை விட
வலுவாக, அழகாக இருக்கமுடியும் என்று உறுதியான விசுவாசத்தில் கூறினார். நேபுகாத்நேச்சாரின் கனவையும் அதின் அர்த்தத்தையும் தேவ ஆவியானவர்
தனக்கு வெளிப்படுத்துவார் என்ற விசுவாசத்தால்தான் அரசரிடம்
தவணை கேட்டார் என்று இரண்டாம் அதிகாரத்தில் படிக்கிறோம். எதையுமே அவர் தன் அறிவால்
நடந்தது என்று பெருமைக்கொள்ளவில்லை. 2:19,
20 ல் "பின்பு இராக்காலத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அப்பொழுது தானியேல் பரலோகத்தின் தேவனை தோத்தரித்தான்....ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது". இதன்மூலம் தானியேலின் தாழ்மை வெளிப்படுத்தப்படுகிறது.
இவ்வளவு
அடையாளங்களையும், அற்புதங்களையும் கண்ட பின்பும், நேபுகாத்நேச்சார்
தானியேலின் தேவனை விசுவாசிக்கவில்லை, மூன்றாம் அதிகாரத்தில், தன் பெருமையை காண்பிக்க
தன் சிலையை தானே நிறுவி, அனைவரையும்
அதை விழுந்து வணங்கவைத்தான். இதைவிட ஒரு பெரிய உதாரணம்
தற்பெருமைக்கு யாராலும் கொடுக்க முடியாது. நாமும் கூட சில நேரங்களில், நமக்கு சிலைவடிப்போம் தானே? உதாரணமாக "விழாவுக்கு என்னை முன்னிலைப்படுத்தவில்லை, வீட்டில் வந்து எனக்கு அழைப்பிதழ் தரவில்லை, இன்னும் பல..." [கண்ணை மூடி ஜெபத்துடன் சிந்திக்கவும்... இனிமேல் இப்படி பேசும்போது நேபுகாத்நேசரின் சிலை உங்கள் கண்முன் வரவேண்டும்]
ஆனால் தானியேலோவென்றால்
இந்த தற்பெருமைக்கு துணைபோகவில்லை. அதனால்தான் தேவ ஆவியானவர், அவர்களோடு [தானியேல்
மற்றும் அவரின் நண்பர்கள்] எரிகிற அக்கினி சூளையில் கூட இருந்தார். சங்கீதம் 1ம்
அதிகாரம் நீதிமான்களுடன் தொடர்பில் இருந்து கர்த்தருடைய ஆலோசனையை கேட்பவர்கள் பாக்கியவான்கள்
என்று கூறுகிறது [ஆலோசனை கேட்க்கும் நண்பர்களை நீதிமான்களாகக் கொள்ளுங்கள்].
இவ்வளவு அடையாளங்களையும்
கண்ட நேபுகாத்நேசர், கொஞ்சம் மனம் மாறியதாக நான்காம் அதிகாரத்தில் தெரிகிறது. அவர்
மக்களுக்கு எழுதிய கடிதத்தில் தன்னுடைய சாட்சியை இப்படியாக பகிர்ந்திருந்தார். தானி
- 4:3 "அவருடைய அடையாளங்கள் எவ்வளவு மகத்துவமும், அவருடைய அற்புதங்கள் எவ்வளவு
வல்லமையுமாய் இருக்கிறது". ஆனாலும் தானியேல் மூலம் தனக்கு உரைக்கப்பட்ட
தீர்க்கதரிசனங்களைக் கேட்டபின்புக் கூட அவர் முழுவதுமாய் "தற்பெருமை" யிலிருந்து
மனம் திருந்தவில்லை.
அவரின் பாபிலோன்
மாளிகை பண்டைக்கால அதிசயங்களில் ஒன்று. வரலாற்று குறிப்புகளில் , அந்த அரண்மனையின்
நீளம் 40 கிலோ மீட்டர் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஐப்பிராத்து நதி அதின் நடுவில்
ஓடியது.
தானியேல்
4:29, 30 ல் "ராஜா பாபிலோன் ராஜ்ஜியத்தின் அரண்மனை மேல் உலவிக்கொண்டிருக்கும்
போது; இது என் வல்லமையின் பராக்கிரமத்தால், என் மகிமைக் பிரதாபக்கென்று, ராஜ்யத்துக்கு
அறமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்"
இந்த வார்த்தை
ராஜாவின் வாயிலிருக்கும் போனதே அவன் ராஜ்ஜியபாரத்திலிருந்து தள்ளப்பட்டான் என்று தானியேல்
4:31ல் வாசிக்கின்றோம். தற்பெருமையிலிருந்து அவன் திருந்தாத காரணத்தால் அவன் மனுஷரிடமிருந்து
தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான் என வேதம் கூறுகிறது. அதே நேபுகாத்நேச்சார்
இந்த தண்டனைகளுக்குப் பின் அவர் மனம்திருந்தி, தேவனை முன்னிலைப்படுத்தி அவரை விசுவாசித்தான்
என்று தானி 34-37ம் வசனங்களில் படிக்கிறோம்.
இந்த கிருபையின்
காலத்திலேயே, நம்முடைய தற்பெருமைகளைச் சுட்டிக்காட்ட
தானியேல் போன்ற தீர்க்கதரிசிகள் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. தேற்றரவாளனாகிய ஆவியானவர்
நம்மோடேக் கூட வாசம்செய்வதால், ஏதாவது காரியத்தின் மூலம் நமக்கு உணர்த்துவார். அந்த
மறைபொருளை நம் ஆன்மாவுக்கு வெளிப்படுத்த, அவரோடு நாம் இணைந்து பயணிப்போமா? ஆமென்.
அடுத்த தலைமுறைக்கான
குடும்ப ஊழியம்
06-Nov-2022
