இந்த பதிவை வாசிக்கும்போது பின்வரும் காரியத்தை உங்கள் கண்முன் காட்சிப்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். ஒரு குடும்பமாய் அவரை சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. உங்களின் அன்பான தாயார், உங்கள் மீது கொண்ட பேரன்பினால், யேசுவிடம் பின்வரும் கோரிக்கையை வைக்கிறார். "உம்முடைய ராஜ்ஜியத்திலே என் குமாரராகிய இவ்விரண்டு பேரில் ஒருவன் உமது வலது பாரிசத்தில், ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்ய வேண்டும்". [ மத்தேயு 20:21 ]. இது உங்கள் பார்வையில் என்ன மாதிரியான விண்ணப்பம். இதில் தெரியும் ஒரு சுயநலம், சரியானதா, தவறானதா என்பதை இந்த பதிவின் இறுதியில் பார்ப்போம்.
வேதத்தில் காணும் ஜெப வீரர்களான எஸ்ராவும், நெகேமியாவும் தங்கள் மக்களுக்காகவும், தேசத்துக்காகவும் உருக்கமாக போராடி ஜெபித்தார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் பாபிலோனில் சிறைப்பட்ட காலங்களில், சிறைபிடிக்கப்பட்டோரில் ஒருவரான நெகேமியா அந்த சூசான் தேசத்து ராஜாவின் சபையில் பெரிய பொறுப்பில் இருந்தார். அப்பொழுது அவருடைய சகோதரரில் ஒருவரும் மற்றுமொரு மனுஷரும் யூதாவிலிருந்து வந்திருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டு, சிறையிருப்பிலிருந்து தப்பின யூதர்கள் எருசலேமில் எப்படி இருக்கிறார்கள் என விசாரிக்க சென்றார்.
மீந்து தப்பின யூதர்கள் அந்த தேசத்திலே மகா தீங்கை அனுபவிக்கிறார்கள், எருசலேமின் அலங்கம் இடிக்கப்பட்டது, அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டது என கேள்விப்பட்டவுடன் நெகேமியா அழுது, துக்கித்து, உபவாசித்து மன்றாடி ஜெபித்தார் என்று நெகேமியா 1 ம் அதிகாரத்தில் படிக்கிறோம். அதுமட்டுமில்லாமல், 6ம் வசனத்தில் - நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவம் செய்தோம் தன்னையும் சேர்த்தே தாழ்த்துகிறார். இதின் விளைவு, நெகேமியாவுக்கு ராஜாவினிடத்தில் தயவு கிடைத்தது. அவர் எருசலேமுக்குச் சென்று அதின் வாசல்களை "எழுந்து காட்டுவோம் வாருங்கள்" என்று அறைகூவல் விடுத்தார்.
இன்றும் கூட நாம் சமூக ஊடகங்களில், தேசம் முழுவதும் நடக்கிற காரியங்கலைப் பார்த்து "உச்" கொட்டிக்கொண்டிருக்கிறோம். மாலையில் குடும்ப ஜெபத்துக்க்காக கூடும் போது, நமக்காகவும் நம் குழந்தைகளுக்காகவும் மட்டும் ஊக்கமாக ஜெபிக்கிறோம். ஒரு எஸ்றா போல, ஒரு நெகேமியா போல கர்த்தருடைய சமூகத்தில், அடுத்தவர்களுக்காகவும் அடுத்த தேசத்து மக்களுக்காகவும் எப்பொழுது கதறி ஜெபிக்கப் போகிறோம்?
“பிதா எவருக்காய் அதை ஆயத்தம் பண்ணியிருக்கிறாரோ அவருக்கேயல்லாமல் இதை அருளுவது எனக்கடுத்ததல்ல” என்று இயேசு அந்த தாய்க்கு பதிலளித்தார். பிதாவின் சித்தமறிந்து ஜெபிப்பதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை.
“வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது” (நீதி. 28:9).